
கேப்பாபிலவு கிராம மக்கள் காணிகளை மீளக்கோரி முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பான அறிக்கை
Published
2019 ஜனவரி 30
கேப்பாபிலவு கிராம மக்கள் காணிகளை மீளக்கோரி முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பான அறிக்கை
தமது காணிகளை வழங்கக் கோரி கடந்த வாரஇறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களைப் பொலிஸார் நடத்திய விதம் தொடர்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியான நாம் கவலையடைகிறோம். 2019 ஜனவரி 26ஆம் திகதி காலை தைரியம் நிறைந்த, உறுதியான கோப்பாபிலவைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமைநோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்கள் இராணுவ முகாமின் பிரதான நுழைவாயில்களை நோக்கி நடந்துசெல்லும்போது பெரும் எண்ணிக்கையான (ஏறத்தாழ 45) பொலிஸார் இராணுவ முகாமுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததுடன், ஆகக் குறைந்தது ஐந்து வாகனங்களும் (பஸ், லொறி, ஜீப் மற்றும் கார்) அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. பேரணியாக வந்தவர்களைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்களுக்கு முன்னால் பேரணியாக வந்த மக்களும் அவர்களுடன் இணைந்த இடம்பெயர்ந்த மக்களும் ஒன்றுகூடினர். தமது காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் உறுதியான, எழுத்துமூல உத்தரவாதம் வழங்கப்படும்வரை இராணுவ முகாமுக்கு முன்னால் இருப்பதையே பேரணியாக வந்தவர்கள் நோக்காகக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததுடன், பேராட்டக்காரர்களை மாத்திரமன்றி பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களையும் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் முகாமுக்குள் இருந்தவாறு புகைப்படங்களையும், வீடியோக்களை எடுத்தவாறும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சமூகத்துக்கு ஆதரவாகவும், அவர்களின் போராட்டத்தை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினரான நாம் சென்றிருந்ததுடன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் இராணுவத்தினர் அவ்வாறே நடந்துகொண்டனர்.
ஜனவரி 24ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு, திருமதி.கே.சந்திரலீலா மற்றும் திருமதி இந்திராணி விவேகானந்தன் ஆகிய இருவரையும் மறுநாள் (25) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் ஆணையை கையளித்தனர். 25ஆம் திகதியும் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் அதற்கு எதிராக முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். எனினும், போராடுவதற்கான மக்கள் உரிமையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன், பொலிஸார் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது. அத்துடன், குறித்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டவர்கள் வீதியை மறிந்து போராட்டத்தில் ஈடுபடவோ, இராணுவ முகாம் மீது கற்களை வீசுவதற்கோ அல்லது பொதுச் செயற்பாடுகளுக்கோ இடையூறு விளைவிக்கக் கூடாது என மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
26ஆம் திகதி காலையில் அங்கிருந்த பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தப் போவதாகக் கூறினர். ஆரம்பத்திலிருந்து பொலிஸார் போராட்டக் காரர்கள் தொடர்பில் கவலைப்பட்டதாகவோ, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு காணப்படும் உரிமை தொடர்பில் நீதிமன்றம் குறிப்பிட்டதையோ கவனத்தில் எடுத்ததாகவோ தெரியவில்லை. இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகளின் சட்டரீதியான தன்மை தொடர்பில் கேள்விகேட்காது, சட்டரீதியான காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதில் ஏன் பொலிஸார் குறியாக இருந்தனர் என்ற கேள்வி எழுகிறது. வீதியின் இரு மருங்கு மற்றும் நிழ்ல் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, போராட்ட காரர்கள் பொலிஸ் வாகனங்களின் நிகழ்களில் ஒளிந்திருக்காது உச்சிவெய்யிலில் இருக்கும்படியாக செயற்பட்டனர். போராட்ட காரர்கள் நிகழ்களில் தமக்கான உணவைச் சமைக்கும் முயற்சிகளை பொலிஸார் கட்டுப்படுத்த முயற்சித்தமை குறித்து நாம் கவனம் செலுத்துகின்றோம். பொதுமக்களின் தேவைக்காக இராணுவ முகாமுக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த
குளாய் நீருக்கான தொடர்பு இடைநிறுத்தப்பட்டது. தமது சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை மனித உரிமைக்குக் கூட இடமளிக்கப்படவில்லை. அங்கு கூடியிருந்த வயதமுதிந்தர்வர்கள், சிறுவர்கள் என தமது உரிமையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் இடமளித்தும் அதனை செயற்படுத்த முடியாது பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.
அன்றையதினம் பிற்பகுதியில் (26 சனிக்கிழமை மாலை 6.30 மணி) நீதிமன்றம் வழங்கிய இரண்டாவது கட்டளையை பொலிஸார் நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் நாம் கவலையடைகிறோம். இராணுவ முகாமிலிருந்து இரண்டு பக்கத்திலும் 75 மீற்றர் தூர எல்லைக்குள் போராட்டக்காரர்கள் இருக்கக் கூடாது என அந்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. முகாம் நுழைவாயிலிலிருந்து சரியாக 75 மீற்றரை அளந்துகொண்ட பொலிஸார் இருள்மங்கியதையும் பொருட்படுத்தாது போராட்ட காரர்களை அந்த எல்iலையிலிருந்து அகற்றினர். அதன் பின்னர் போராட்டகாரர்கள் இராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. எதிரியில் பாரிய அகழி இருப்பதாக போராட்டகாரர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டபோதும் பொலிஸார் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன், நீதிமன்ற உத்தரவில் வீதியின் எந்தப் பகுதி என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு முன்னும் பின்னுமாக இழுபட்ட நிலையில் விரும்பியவாறு நடக்குமாறு கூறிய பொலிஸார், போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கான பொறுப்பை தாம் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். அது மாத்திரமன்றி போராட்டம் தொடர்பில் தாம் வீடியோ பதிவுகளை வைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் போராட்டத்தில் கோஷமிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியும் ஒடுக்க பொலிஸார் முயற்சித்தனர். அச்சமான சூழ்நிலையில் கிராமத்தவர்கள் இராணுவ முகாமுக்கு எதிராக உள்ள குறுகிய நிலப்பரப்பில் வேலிகள், முற்கள் மற்றும் அகழி நிறைந்த ஆபத்தான பகுதிக்குச் சென்றனர்.
மறுநாள் (28 திங்கட்கிழமை) நீதிமன்றம் பிரதிவாதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு போராட்டத்தை எங்கு நடத்துவது என்பது தொடர்பில் பொலிஸாருடன் சமரசத்துக்குச் செல்லுமாறு அறிவுறத்தியது. அதுவரை அந்த சமூகத்தினர் அகழியில் இருந்துகொண்டே தமது சொந்தக் காணிகளுக்கான உரிமையைக் கோரினர். போராடுவதற்காக காணப்படும் உரிமை மற்றும் அவ்வாறு போராடுபவர்கள் நியாயமாகவும், மதிப்புடனும் நடத்தப்பட வேண்டும் என நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறான நிலையில் கேப்பாபிலவு மற்றும் ஏனைய பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள சகல காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், காலத்துக்கு காலம் விடுவிக்கப்பட்ட
காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியேறுவதற்கான உதவிகளை வழங்குவதுடன், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பொருளாதார ரீதியில், கலாசார ரீதியில் ஏற்பட்ட சேதங்களுக்கும் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.